Tuesday 8 September 2015

கால், கை முட்டிப்பகுதி கருமையை போக்கும் வழிகள்

கால், கை முட்டிப்பகுதி கருமையை போக்கும் வழிகள்


முகம், கழுத்து கை, கால் என மற்றவர்கள் பார்வையில் படும் பகுதிகள் அழகாகத் தெரிய வேண்டும் என்று ஃபேஷியல், பிளீச்சிங், மெடிக்யூர், பெடிக்யூர் செய்துகொள்வதில் ஆர்வம் காட்டுகிறோம். ஆனால்  நம்கண்களுக்கு அதிகம் தெரியாத பகுதி என்பதால், கை மூட்டு, கால் மூட்டுப் பகுதிகளுக்கு பலரும் முக்கியத்துவம் கொடுப்பது இல்லை.

நீர்ச்சத்துக் குறைவால் சருமம் வறண்டுபோவதால், இறந்த செல்கள் தேங்கி இப்பகுதிகள் கறுத்துவிடுகின்றன. மூட்டுத்தோல்பகுதி ஆரோக்கியமாக, இயல்பான நிறத்தில் இருக்க சில எளிய விஷயங்களைச் செய்தாலே போதும். மூட்டுப்பகுதியை மசாஜ் செய்வதன் மூலம் ரத்த ஓட்டத் தை சீர்செய்ய முடியும். ரத்த ஓட்டம் சீரானால் கறுப்புத் திட்டுக்கள் மறையும். தேங்காய் எண்ணெயை மூட்டுப் பகுதியில் விட்டு, 5 – 10 நிமிடங்கள் நன்றாக மசாஜ் செய்தால், நல்ல பலன் தெரியும்.

ஆலிவ் எண்ணெயையும் பயன்படுத்தலாம். சூரியனிடம் இருந்து வரும் புற ஊதாக் கதிர்களால் தோல் கருமை அடைவதைத் தடுக்கும். கற்றாழையைத் தோல் சீவி, அதனுள் இருக்கும் ஜெல்லை அப்படியே மூட்டுப் பகுதியில் பூசி, 10 நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும். அரை மணி நேரத்துக்குப் பிறகு தண்ணீரில் கழுவ வேண்டும்.

பாதி எலுமிச்சைப் பழத்தில் சிறிதளவு தேன் விட்டு, மூட்டுப் பகுதியில் ஐந்து நிமிடங்கள் மசாஜ் செய்து, 30 நிமிடங்கள் அப்படியேவிட வேண்டும். பின்னர், தண்ணீர் விட்டுக் கழுவ வேண்டும். தேன் அதிக அளவு சேர்த்து, தினமும் மசாஜ் செய்தால், விரைவில் கருமை மறையும்.

குண்டாக இருப்பவர்கள் எந்த வகையான உடைகளை அணியலாம்

குண்டாக இருப்பவர்கள் எந்த வகையான உடைகளை அணியலாம்




உடை விசயத்தில் முக்கியமான ஒன்று அனைவரும் நம் உடல்வாகிற்கு எது பொருந்துமோ அந்த வகையான உடைகளையே தேர்வு செய்ய வேண்டும். ஆசைப்படுகிறோம் என்பதற்காக பொருத்தமில்லாத உடைகளை அணிந்து மற்றவர்கள் கிண்டலடிக்கும் படி நடந்து கொள்ளக்கூடாது. சரியான உடைகளை தேர்வு செய்வதன் மூலம் நம்மிடம் உள்ள மைனஸ்களை பிளஸ்களாக மாற்றலாம்.

எடுத்துக்காட்டாக குண்டாக மற்றும் குள்ளமாக இருப்பவர்கள்,ரொம்ப ஒல்லியா இருப்பவர்கள், எனக்கு நல்ல ஸ்ட்ரக்சர் இருக்குங்க ஆனா பார்த்தால் ஸ்மார்ட்டா செக்ஸியா இல்லைன்னு நினைக்கிறவங்க இவங்க எல்லோருமே இந்த பிரச்னையை முழுவதும் இல்லை என்றாலும் ஓரளவு சரி செய்யலாம். இவர்களுக்கு தாங்க இருப்பதிலேயே ரொம்ப சிரமம், எந்த உடை அணிந்தாலும் திருப்தி இல்லாமலே இருப்பாங்க, குண்டாக இருப்பவர்கள் கண்டிப்பாக ரொம்ப வழுவழுப்பான உடைகளை தேர்வு செய்யவே கூடாது.

காரணம் அவ்வகையான உடைகள் உடலோடு ஒட்டி உடல் பாகங்களை வெளிப்படையாக காட்டும். குறிப்பாக மார்பு, இடுப்பு மற்றும் பின்புறம், இது பார்ப்பவர்களுக்கு ஒரு வெறுப்பையே தரும். இவ்வைகையான ஆடைகளை முற்றிலும் தவிர்த்து விடுதல் நலம், இல்லைங்க எனக்கு இந்த மாதிரி துணி தான் பிடிக்கும் என்றால் இருப்பதிலேயே குறைந்த அளவு வழுவழுப்பான உடைகளை தேர்வு செய்யுங்கள். காட்டன் வகை உடைகள் சிறந்தது.

ஏங்க! எனக்கு என்ன வயசா ஆகிடுச்சு! காட்டன் புடவை எல்லாம் கட்ட!! என்றால் காட்டன் புடவைகளிலேயே பல வகை உண்டு என்பது உங்களுக்கு தெரியும், எனவே அதில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்யலாம்.  பெண்கள் சுடிதார் அணியும் போது கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் தொள தொளன்னு அணியக் கூடாது. குறிப்பாக குள்ளமாக குண்டாக உள்ளவர்கள், அதே போல ரொம்ப இறுக்கமாகவும். இடுப்பு பகுதியில் அளவு குறைத்து ஓரளவாவது ஸ்ட்ரக்சர் கொண்டு வரும் படி இருக்க வேண்டும்.

ரொம்ப இறுக்கமாகவும் இருந்தால் பின்புறம் அசிங்கமாக தெரியும். எனவே இடை பகுதியில் கவனமெடுத்து சுடிதார் அணிய வேண்டும். ஒல்லியாக உள்ளவர்கள் ரொம்ப மெல்லிய உடையை தவிர்க்க வேண்டும், இவை உடலை குச்சி குச்சியாக காட்டும். எலும்புகள் துருத்திக்கொண்டு அசிங்கமாக இருக்கும். சுடிதார் அணியும் போது கையின் அளவு ரொம்ப குறைவாக வைக்க கூடாது. இது உங்களின் நீண்ட கைகளை (ஒல்லியாக இருப்பதால்) இன்னும் நீண்டதாக காட்டும். தேர்வு செய்யும் உடை திக்கான உடையாக பார்த்துக்கொள்வது நல்லது.

Monday 7 September 2015

உதடுகளில் உள்ள வெடிப்புகளை போக்க:

உதடுகளில் உள்ள வெடிப்புகளை போக்க:


படுப்பதற்கு முன்பு பாலேட்டை சிறிதளவு எடுத்து உதட்டில் தடவ வேண்டும். அப்படியே மறுநாள் காலையில் எழுந்து பார்த்தால் காய்ந்த நிலையில் இருக்கும் பாலேட்டை சிறிதளவு காட்டனில் பன்னீரை நனைத்து துடைக்கவும். பீட்ரூட் காய்களை நறுக்கும்போது அதன் தோலை நாம் நீக்குவோம். அந்த தோலை உதட்டில் தேய்த்தால் நாளடைவில் உதட்டில் உள்ள வெடிப்பு நீங்கி ரோஜா இதழ்கள் போல் நிறம் மாறி உதடுகள் மென்மையாக காணப்படும்.

கூந்தலுக்கு ஆயில் மசாஜ் செய்வது எப்படி?

கூந்தலுக்கு ஆயில் மசாஜ் செய்வது எப்படி?

ஆலிவ் எண்ணெய், நல்லெண்ணெய், பாதாம் எண்ணெய், தேங்காய் எண்ணெய், நவரத்தின எண்ணெய் இவை எல்லாவற்றையும் கலந்தும் ஆயில் மசாஜ் செய்யலாம். ஆயில் மசாஜ் செய்தால் டென்ஷன் குறையும். மேலும் இரத்த அழுத்தம், இரத்த சோகை போன்ற பிரச்சனை உள்ளவர்கள் புத்துணர்ச்சி பெறுவார்கள். 

முதலில் தலையை நன்கு சீவிக் கொள்ளவும். பிறகு தலையின் மேல் பகுதியில் இருந்து வகுடு இருக்கும் பகுதி முழுவதும் எண்ணெயை பஞ்சால் தடவவும். ஒவ்வொரு சிறு சிறு பகுதியாக பிரித்து எடுத்து பஞ்சால் எண்ணெயை தொட்டு தலையின் எல்லா பகுதியிலும் படும்படி தடவவும். எண்ணெய் முழுவதும் தடவிய பிறகு இரண்டு கையையும் தலையின் அடிவழியாக விட்டு தலை முழுவதும் anticlockwise-ல் சுற்றவும். அப்போது கையின் விரல்களால் மட்டும் தேய்க்கவும்.

இரண்டு கையின் கட்டைவிரலை தலையின் மேல் பகுதியில் வைத்து எதிர் எதிர் திசையில் வைத்து நகர்த்திக் கொண்டே வரவும்( ஒரு விரல் மேலேயும் மற்றொரு கட்டை விரலை கீழேயும் வைத்து நகர்த்தி மேலிருந்து கீழ் வரை நகர்த்திக் கொண்டே வரவும்). இதே போல் தலையின் எல்லா பகுதியிலும் செய்யவும். செய்த பிறகு மீண்டும் இரண்டு கையை தலையின் அடிவழியாக விட்டு anticlockwise-ல் சுற்றவும். முதலில் தலையின் மேல் புறத்தில், ஒரு கையால் சிறிதளவு முடியை எடுத்து ஒரு விரலில் இருமுறை சுற்றிக் கொண்டு தலையில் வைத்து சுற்றி அழுத்தி தேய்க்கவும் (clockwise direction). நன்கு உள்ளங்கையை வைத்து தேய்க்கவும்.

இதே போல் தலை முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாக முடியை எடுத்துத் தேய்க்கவும். பிறகு மீண்டும் இரண்டு கையையும் தலையின் அடிவழியாக விட்டு anticlockwise-ல் சுற்றவும். பிறகு தலையில் மேல் பகுதியில் இருந்து இரண்டு கைகளால் கொஞ்சம் கொஞ்சமாக முடியை எடுத்து விரலில் சுற்றி கொண்டு அப்படியே மெதுவாக இழுத்து ஃப்ரஷர்(pressure) கொடுக்கவும். இதே போல் தலை முழுவதும் எல்லா முடியையும் எடுத்து செய்யவும்.

பிறகு மீண்டும் இரண்டு கையையும் தலையின் அடிவழியாக விட்டு anticlockwise-ல் சுற்றவும். இரண்டு கையையும் ஒன்றாக சேர்த்து(படத்தில் உள்ளவாறு) தலை முழுவதும் விரல் மட்டும் படும்படி அடிக்கவும். தலையின் முன்பக்கத்தில் பத்து விரல்களையும் வைத்து விரல்களால் தடவிக் கொண்டே வரவும். இதைப் போல் தடவி காது அருகே வந்ததும் அழுத்தவும். மீண்டும் இரண்டு கையையும் தலையின் அடிவழியாக விட்டு anticlockwise-ல் சுற்றவும். தலையின் மேல் பகுதியில் ஒரு கையையும் மற்றொரு கையை தலையின் அடிப்பகுதியில் வைத்து அழுத்தி விடவும்.

அப்படியே எல்லா இடங்களிலும் அழுத்தவும். பிறகு மீண்டும் இரண்டு கையையும் தலையின் அடிவழியாக விட்டு anticlockwise-ல் சுற்றவும். தலையின் முடியை இரண்டு பாகங்களாக பிரித்துக் கொள்ளவும். பிறகு ஒரு பாகத்தின் உள்ள முடியை மடித்து சுற்றி anticlockwise- ல் தேய்க்கவும். பிறகு மற்றொரு பாகத்தை அதே போல் anticlockwise-ல் தேய்க்கவும்.

பிறகு எல்லா முடியையும் ஒன்றாக சேர்த்து சுற்றி anticlockwise-ல் தேய்க்கவும். இறுதியில் இரண்டு கையையும் தலையின் அடிவழியாக விட்டு anticlockwise-ல் சுற்றிய பிறகு தலையை சீவி கொண்டைப் போட்டுக் கொள்ளவும். (ஒவ்வொரு முறையும் தலைமுடியை சீப்பு கொண்டு நன்கு சீவிக் கொள்ளவும்.) குறைந்தது அரைமணி நேரமாவது தலையில் எண்ணெய் ஊறி இருக்க வேண்டும். அதன் பிறகு ஷாம்பூ அல்லது சீயக்காய் தேய்த்து தலையை அலசி விடவும்.

குதிகால் வெடிப்பு எதனால் வருகிறது

குதிகால் வெடிப்பு எதனால் வருகிறது


கால்களின் அழகை கெடுக்கும் வகையில் வருவது தான் குதிகால் வெடிப்பு. வறட்சி மட்டுமின்றி, வேறுசில காரணங்களும் குதிகால் வெடிப்பை ஏற்படுத்தும். குதிகால் வெடிப்பு ஒருவருக்கு இருந்து, அதனை சரியாக கவனிக்காமல் விட்டால், அதனால் கடுமையான குதிகால் வலியை சந்திப்பதோடு, சில நேரங்களில் முற்றிய நிலையில் இரத்தக்கசிவு ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

குதிகால் வெடிப்பு எதனால் வருகிறது என்பதையும் தெரிந்து கொண்டால், பிற்காலத்தில் குதிகால் வெடிப்பு வராமல் தடுக்கலாம். பாதங்கள் வெளியில் அதிகம் தெரிவதால், பாதங்களில் உள்ள ஈரப்பசை விரைவில் போய், வறட்சியை ஏற்படுத்தி, வெடிப்பை ஏற்படுத்துகிறது. மேலும் வறட்சியான சருமத்தினர், தண்ணீர் அதிகம் குடிப்பதோடு, தினமும் மாய்ஸ்சுரைசரைத் தடவ வேண்டும். உடல் எடை அளவுக்கு அதிகம் இருந்தாலும், குதிகால் வெடிப்பு வரும்.

இதற்கு காரணம், அளவுக்கு அதிகமான அழுத்தத்தை பாதங்களுக்கு கொடுப்பதால், பாதங்களில் வெடிப்புகள் ஏற்படுகிறது. எனவே குதிகால் வெடிப்பைத் தடுக்க, உடல் எடையை குறைக்க முயற்சிக்க வேண்டியதும் அவசியம். நீரிலேயே நீண்ட நேரம் இருந்தால், அதனால் கால்கள் அதிகம் நீரில் ஊறி, சருமத்தில் உள்ள இயற்கை எண்ணெய்கள் அனைத்தும் வெளியேறிவிடும்.

இதன் காரணமாக குதிகால்களில் வெடிப்புகள் ஏற்படும். மேலும் துணி துவைப்பவர்களின் பாதங்களில் வெடிப்புக்கள் அதிகம் இருப்பதற்கு இது தான் காரணம். காலணி அணியாமல் வெறும் காலிலேயே எப்போதும் சுற்றினால், பாதங்களில் வறட்சியுடன், கிருமிகளும் நுழைந்து, வெடிப்புக்களை மேலும் பெரிதாக்கி, நிலையை மோசமாக்கிவிடும்.

ஆகவே எங்கு சென்றாலும் காலணிய அணிந்து செல்லுங்கள். வெளியில் சென்று வந்தவுடன் கால் பாதங்களை நன்றாக கழுவ வேண்டும். இரவு படுக்க போகும் முன்னர் கால்களுக்கு கிரீம் தடவி விட்டு செல்லுங்கள். இது கால் பாதத்தின் ஈரப்பதத்தை பாதுகாக்கும்.  

பிரபலங்களின் அழகு ரகசிய குறிப்புகள்

பிரபலங்களின் அழகு ரகசிய குறிப்புக



சினிமா நட்சத்திரங்களின் அழகு ரகசியங்களைத் தெரிந்து கொள்வதில் சாமானிய மக்களுக்கு எப்போதும் ஒரு ஆர்வம் உண்டு. அழகுசாதனப் பொருள்களுக்கான விளம்பரங்களில், முன் எப்போதையும் விட, கடந்த சில வருடங்களில் நடிகர், நடிகைகளின் ஆதிக்கம் அதிகரித்திருப்பதன் பின்னணியும் அதுவே. ஆஸ்தான நடிகையோ, நடிகரோ உபயோகிக்கிற அனைத்தையும் தானும் உபயோகித்தால் அவர்களைப் போலவே மாறிவிடலாம் என நம்புகிற  மனிதர்கள் நம்மிடையே பலர் உண்டு. அதெல்லாம் விளம்பர உத்தி என்பதை அறியாத அப்பாவிகள் அவர்கள்!

நடிகர், நடிகைகள் அவர்களும் நம்மைப் போல மனிதர்கள்தானே?

முதுமையும் தள்ளாமையும் அவர்களுக்கும் உண்டு. அவர்களுக்கும் முடி கொட்டும். நரைக்கும். வழுக்கை விழும். சருமத்தில் சுருக்கங்கள் வரும். அழகு மெல்ல விடைபெறும். சாதாரண மக்களுக்கும் பிரபலங்களுக்கும் ஒரே ஒரு விஷயத்தில்தான் வித்தியாசம். அழகை ஆராதிப்பதிலும், கட்டிக் காப்பதிலும் அவர்கள் காட்டுகிற அக்கறை. அது நம்மிடம் மிஸ்ஸிங். அதனால்தான் நமக்கு சீக்கிரமே வரும் முதுமை, அவர்களுக்கெல்லாம் தாமதமாகிறது. அழகைப் பேண பிரபலங்கள் என்னவெல்லாம் செய்கிறார்கள்? அழகுக்கலை நிபுணர் மேனகா பேசுகிறார்...

தலைக்கு:

* பிரபலங்கள், சாமானிய மனிதர்களைப்போல, நரைத்த முடியுடனும் வழுக்கைத் தலையுடனும் வெளியில் தலை காட்ட முடியாது. அதை மறைக்கும் டெக்னிக்குகளை பின்பற்றியே ஆக வேண்டும். நடிகைகளைப் பொறுத்த வரை முடியை ரொம்பவும் நீளமாகவோ, ரொம்பவும் குட்டையாகவோ வைத்துக் கொள்ள விரும்ப மாட்டார்கள். மீடியம் நீளமுள்ள, அதாவது, தோள்பட்டை அளவுக்கு வைத்துக் கொள்வார்கள். அப்போதுதான் அவர்களால் எப்படிப்பட்ட ஹேர் ஸ்டைலுக்குள்ளும் பொருந்திப் போக முடியும்.

* வெஸ்டர்ன் லுக்கோ... ட்ரெடிஷனல் லுக்கோ... எதுவும் அவர்களுக்குப் பிரச்னையே இல்லை. எப்படிப்பட்ட ஸ்டைலுக்கும் ஹேர் அட்டாச்மென்ட்டுகள் கிடைக்கின்றன இன்று. கிளிப் உடன் கூடிய அவற்றை அப்படியே ஒரிஜினல் கூந்தலில் பொருத்திக்கொள்ள வேண்டியதுதான். கலரிங், அயர்னிங், பெர்மிங் என எதை வேண்டுமானாலும், அந்த செயற்கை அட்டாச்மென்ட்டின் மேல் செய்து கொள்ளலாம். கூந்தலுக்கு 1 சதவிகிதம்கூட பாதிப்பே இருக்காது. வெளியிலிருந்து பார்க்கிறவர்களுக்கு அவர்கள் ஒரிஜனல் கூந்தலில் செய்து கொண்டது மாதிரியே தெரியும்!

* நரையை மறைப்பதிலும் நட்சத்திரங்கள் ரொம்பவே கவனமாக இருப்பார்கள். ஒரு இன்ச் கூட நரை முடி வெளியே தெரியாமலிருக்க வேண்டும் என்கிற ஜாக்கிரதை உணர்வில் வாரம் ஒரு முறை கூந்தலுக்கு டச் அப் செய்கிறவர்களும் உண்டு. இன்னும் சொல்லப் போனால், சம்பந்தப்பட்ட நடிகருக்கோ, நடிகைக்கோ வெள்ளை முடி இருப்பது, அவர்களது வாழ்க்கைத்துணைக்குக் கூட தெரியாமலிருக்கலாம். எக்கா ரணம் கொண்டும், தரக் குறைவான ‘டை’யை அவர்கள் உபயோகிக்கவே மாட்டார்கள். அமோனியா கலக்காத வாட்டர் பேஸ்டு ஹேர் கலரிங்கை மட்டுமே உபயோகிப்பார்கள்.

* சரி திடீரென ஒரு ஃபங்ஷன். அல்லது போட்டோ ஷூட்... கலரிங் செய்யவோ, பார்லர் போகவே நேரமில்லை... நரையையும் மறைத்தாக வேண்டும்... என்ன செய்வது? ‘டை ஸ்டிக்’ என ஒன்று இருக்கிறது. கருப்பு நிறத்தில் லிப்ஸ்டிக் மாதிரி இருக்கும்... அதை நரை உள்ள இடங்களில் டச் அப் செய்து கொண்டால் போதும்.

கண்களுக்கு...

கேமரா வெளிச்சமும், கண்ட நேரத்து வேலையும் அவர்களின் கண்களையும் பதம் பார்க்கும். அதிலிருந்து விடுபட கண்களுக்கான மசாஜ் செய்து கொள்வார்கள். நடிகைகளுக்கு கண்களின் கவர்ச்சி மிக முக்கியம். முகத்தில் மேக்கப்பே இல்லாவிட்டாலும், கண்களுக்கு மட்டும் மேக்கப் செய்துகொள்ள விரும்புவார்கள். கண் இமைகளை நீளமாகக் காட்ட, ஐ லேஷ் எக்ஸ்டென்ஷன்ஸ் இப்போது பிரபலமாகி வருகிறது. கூந்தல் இல்லாதவர்கள் ஹேர் எக்ஸ்டென்ஷன் செய்து நீளமான முடியிருப்பது போலக் காட்டிக் கொள்வது போல, இது கண் இமைகளுக்கானது. ஒருமுறை செய்து கொண்டால் ஒன்றரை மாதம் வரை அப்படியே இருக்கும்.

நகங்களுக்கு:

நடிகைகளின் கைகளை கவனித்தீர்களானால், நகங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதைப் பார்க்கலாம். அவர்களது நகங்கள் நீளமாகவும், பளபளப்பாகவும் இருக்கும். நெயில் ஆர்ட் செய்து கொள்வதை விரும்புவார்கள். அதில் என்னவெல்லாம் லேட்டஸ்ட்டோ அதையெல்லாம் முயற்சி செய்து பார்ப்பார்கள். நகங்களே இல்லாவிட்டாலும் நோ பிராப்ளம். செயற்கையாக ஒட்டிக்கொள்ளக் கூடிய ஜெல் மற்றும் அக்ரிலிக் நகங்கள் கிடைக்கின்றன. ஏற்கனவே உள்ள நகங்களின் மேல் இவற்றை ஒட்டிக் கொண்டு விட்டால் போதும், வித்தியாசம் தெரியாது!

வாக்சிங்:

நடிகைகள் உபயோகிக்கிற எல்லா அழகுசாதனங்களுமே ஸ்பெஷல் வகையறாதான். அதில் வாக்சும் ஒன்று. சாதாரணப் பெண்கள் உபயோகிக்கிற ஹாட் வாக்ஸ், கோல்ட் வாக்ஸெல்லாம் இவர்களுக்குப் பிடிக்காது. ஃப்ரூட் வாக்ஸ் என ஒன்று வந்திருக்கிறது. விதம் விதமான வாசனைகள் கொண்ட இதை உபயோகிக்கும் போது, மறுபடி முடி வளர நேரம் பிடிக்கும். ஷூட்டிங் தொடங்குவதற்கு முன்புதான் இதை உபயோகிப்பார்கள். முகத்துக்குக் கூட இந்த வாக்ஸ் உபயோகிக்கிற நடிகைகள் இருக்கிறார்கள். இதில் வாக்ஸ் செய்வதற்கு முன் உபயோகிக்கக் கூடிய ப்ரீ லோஷனும், வாக்ஸ் செய்த பிறகு உபயோகிக்கக்    கூடிய லோஷனும் இருப்பதால், சருமமும் அழகாக மின்னும்.

உடைகள் மற்றும் நகைகள்...

* ஆள் பாதி, ஆடை பாதி என்பது நடிகைகள் விஷயத்தில் மிகச் சரி. எந்த நடிகையாவது அவர்களுக்குப் பொருந்தாத உடை அணிந்து பார்த்திருக்கிறீர்களா? தைத்துப் போட்டார்களா? போட்டுக் கொண்ட பின் தைத்தார்களா எனக் கேட்க வைக்கிற அளவுக்கு அத்தனை கச்சிதமாக உடை அணிவார்கள்.

*  பெரும்பாலான நடிகைகள் பொது நிகழ்ச்சிகளிலும், சாதாரண நேரத்திலும் நகைகள் அணிய மாட்டார்கள். கழுத்தில் சின்னதாக ஒரு சங்கிலி கூட இருக்காது. தொடர்ந்து நகைகள் அணிவதுகூட சருமத்தில் சில அடையாளங்களைப் பதிக்கும். ஷூட்டிங்கின் போதும், பிரமாண்ட நிகழ்ச்சியின் போதும் மட்டும்தான் அவர்கள் நகைகள் அணிவார்கள்.

அழகு சம்பந்தப்பட்ட பிரச்னைகளை மறைக்கிற டெக்னிக்குகள் இவையெல்லாம். அதை வைத்து நடிகைகள் எல்லாம் அவலட்சணமானவர்கள் என்றும், இப்படித்தான் ஏமாற்று வேலைகளைச் செய்து, அவர்களது குறைகளை மறைத்து, அழகாகக் காட்டிக் கொள்கிறார்கள் என்றும் அவசரப்பட்டு நீங்களாக ஒரு முடிவுக்கு வர வேண்டாம். அழகைத் தக்க வைத்துக் கொள்வதில் அவர்களது அக்கறை நம்மையெல்லாம் பிரமிக்க வைக்கும். அப்படி என்ன செய்வார்கள் என்கிறீர்களா?

* கூந்தலோ, சருமமோ அதற்கான சிகிச்சைகளை முறையாக எடுத்துக் கொள்வார்கள். வாரம் 2 முறை கூந்தலுக்கான ஹேர் பாலிஷிங்கும், 4 வாரங்களுக்கு ஒரு முறை ஹேர் கட்டும், வாரம் ஒரு முறை ஹேர் ஸ்பாவும் செய்து கொள்வார்கள். கூந்தல் வளர்ச்சிக்கு உதவக்கூடிய ஷாம்பு, கண்டிஷனர் மற்றும் சீரம்தான் உபயோகிப்பார்கள். வாரம் ஒரு முறை கூந்தலுக்கு மசாஜ் செய்து கொள்வார்கள். கூந்தலை அடர்த்தியாகக் காட்டக் கூடிய ‘வால்யூம் ட்ரீட்மென்ட்’ செய்து கொள்வார்கள்.

* மிகச்சிறந்த மேக்கப் சாதனங்களை மட்டுமே உபயோகிப்பார்கள். அவை எஸ்.பி.எஃப் உள்ளதும், வாட்டர் பேஸ்டுமானதாக இருக்கும். மேக்கப் முடித்த பிறகு ஒருவித ஸ்பிரேவை அடித்துக்கொண்டால், பல மணி நேரத்துக்கு மேக்கப் அப்படியே இருக்கும்.

* மேக்கப் செய்து கொள்வதில் எடுத்துக் கொள்கிற அக்கறையை, மேக்கப்பை நீக்குவதிலும் எடுத்துக் கொள்வார்கள். சரும அழகுக்கும், ஆரோக்கியத்துக்கும் மேக்கப்பை முறையாக சுத்தப் படுத்த வேண்டியது மிக முக்கியம். எத்தனை தாமதமாக ஷூட்டிங் முடித்துத் திரும்பினாலும், மேக்கப்பை நீக்கி 100 சதவிகிதம் சுத்தமான பிறகுதான் தூங்கச் செல்வார்கள். கூந்தலுக்கும் அப்படித்தான். தவறாமல் நைட் கிரீம் உபயோகிப்பார்கள். வாரம் தவறாமல் ஃபேஷியலும், பாடி பாலிஷும் செய்து கொள்வார்கள். எங்கே வெளியில் சென்றாலும், உடல் முழுவதற்குமான சன் பிளாக் உபயோகிப்பார்கள்.

* எல்லாவற்றையும் விட முக்கியம்... அவர்களது சாப்பாடு. நிறைய காய்கறிகள், பழங்கள், பழச்சாறுகள் சேர்த்துக் கொள்வார்கள். தூக்கத்தை விட்டுக் கொடுக்க மாட்டார்கள். தவறாமல் உடற்பயிற்சி செய்வார்கள்.

* கைகளுக்கும், கால்களுக்கும் ஸ்பா மெனிக்யூர் மற்றும் ஸ்பா பெடிக்யூர் செய்து கொள்வார்கள். டென்ஷனை விரட்ட ரெஃப்ளெக்சாலஜி செய்து கொள்வார்கள். என்னதான் வேலை இருந்தாலும் ஓய்வைத் தியாகம் செய்ய மாட்டார்கள்.

மசாஜ் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்: தவிர்க்க வேண்டிய சூழ்நிலைகள்

மசாஜ் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்: தவிர்க்க வேண்டிய சூழ்நிலைகள்




மசாஜ் செய்வதால், தோலில் ஏற்படும் நன்மைகள் ஏராளம். மசாஜ் செய்வதன் மூலம் தோலில் காணப்படும் துளைகள் விரிவடைந்து, உடலில் காணப்படும் தீய கழிவுகள் வியர்வை மூலம் வெளியேறி விடும். மசாஜ், தசைகளின் இறுக்கத்தை குறைத்து, தசை வலியை நீக்குகிறது. கடினமான வேலைகளால் உடல் தசைகளில், “லாக்டிக் ஆசிட்’ சேரும்.

மசாஜ், தசைகளில் சேரும், “லாக்டிக் ஆசிட்’களை நீக்கி, உடலை புத்துணர்ச்சி மற்றும் உற்சாகத்துடன் இருக்க உதவும். ரத்த ஓட்டம்: மசாஜ் செய்யப்படும் பகுதிகளில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால், அவ்வுடல் உறுப்புகளுக்கு அதிகளவில் ஊட்டச்சத்து கிடைப்பதுடன், அந்த உறுப்புகளில் நோய் குணமாகும் தன்மையும் அதிகரிக்கும். ரத்த ஓட்டம் அதிகரிப்பதால், வீக்கம் போன்றவை ஏற்படுவது குறையும். மசாஜ் செய்வதால் ரத்தத்தில் அதிகளவில் ஆக்சிஜனை எடுத்துச் செல்லும் திறன் மற்றும் அவற்றை நன்கு பயன்படுத்திக் கொள்ளும் திறன் அதிகரிக்கும்.

மசாஜ் செய்வதை தவிர்க்க வேண்டிய சூழ்நிலைகள்:

* காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கும் காலங்களில் எவ்வித மசாஜும் செய்யக்கூடாது.

* கர்ப்பிணி பெண்கள் வயிற்றுப் பகுதியில் மசாஜ் செய்வதை தவிர்ப்பது நல்லது.

* வயிற்றுப் போக்கு வாயுப் பிரச்சினை, சிறு குடலில் புண்கள் அல்லது வயிற்றில் கட்டி ஆகிய பிரச்சனை உடையவர்கள் வயிற்றில் மசாஜ் செய்வதை தவிர்க்க வேண்டும்.

* தோல் வியாதி உடையவர்களுக்கு மசாஜ் செய்வது பொருத்தமற்றது.